திங்கள், 21 ஜூலை, 2014

பள்ளிக்கூடம் .

பள்ளிக்கூடம் .

பள்ளிக்கூடம் .
எனக்கு எம் தொடக்க கல்வி ஆசிரியர் என் கையை பிடித்து அ ,ஆ எழுத சொல்லி தந்து மூலம் தொடங்கியது எனது அறிவுலகத்தின் ஏணிப்படி(நம் எல்லோருக்கும் இப்படி தான் இருந்து இருக்கும் கல்வியின் தொடக்கம்) .இப்படியாக வளர்ந்து இறுதியாக பொறியியல் துறையில் கட்டுமான பொறியாளர் ஆக பணி செய்கிற வரை கல்வியின் மூலம் வாழ்கையில் மேன்மை பெற்று இருக்கிறேன் நான் .
நான் பிறந்த போதே எனது ஊரின் அரசு பள்ளியை மூடி இருந்தார்கள் .அதனால் என் ஊர் கிறிஸ்தவ சமயம் பின்பற்றும் மக்கள் நிறைந்த ஊர் ஆக இருந்ததினால் அரசு உதவி பெரும் பள்ளியில் தான் எனக்கான வாழ்க்கை தொடங்கியது (பள்ளிகளை ஏற்படுத்தி எல்லோரையும் படிக்க வைத்த முன்னவர்களை நன்றியோடு எண்ணி கொள்கிறேன் இந்த நேரத்தில் )இப்படியாக பனிரெண்டு வரை சொந்த ஊரிலே படித்து விட்டு பிறகு நாகர்கோவில் சென்று பொறியியல் தொழில் நுட்பம் படித்து விட்டு அதன் பிறகு வேலைக்கு சேர்ந்து சம்பாதித்த பிறகு தொலை தூர கல்வி மூலம் பொறியாளர் (b.tech )படித்து முடித்து நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறேன் .நான் படித்தது முழுவதும் தமிழில் தான் .டியூஷன் போனதே இல்லை இதுவரை .ஆனாலும் நல்ல மதிப்பெண் உடனே தான் தேறி இருக்கிறேன் எல்லா வகுப்பிலும் . அரசு பள்ளிகளின் தீரா காதலன் நான் .தனியார் பள்ளிகளை முழுவதும் எதிர்ப்பவன் .கல்வியை காசுக்கு விற்பது தாய்பாலை விற்பதற்கு சமம் என்ற தமிழகம் கண்ட ஒரே நல்ல முதல்வர் பெரும் தலைவர் காமராஜர் ,உடன் உடன்படுபவன் நான் .....
ஆனால் இன்று என் ஊரில் பெருவாரி மக்கள் தாங்கள் படித்த பள்ளியை வெறுக்கிறார்கள் .தாங்கள் பிள்ளைகள் தமிழ் பள்ளியில் படித்து வாழ்வில் முன்னேறாமல் இருந்து விடுவர் என்கிறார்கள் கேட்டால் .எனது பள்ளியில் எல்லா வசதியும் இருந்த பிறகும் .மக்கள் தான் படித்த எனது ஊர் பள்ளியை வெறுக்க முக்கிய காரணம் அன்று அவர்கள் படித்த போது காஞ்சி குடிக்க கூட காசு இல்லை அப்படி பட்ட நிலமையில் அபத்பந்தவனாய் இருந்த பள்ளிகூடம் இன்று பணம் அதிகம் வந்த உடன் எச்சில் இலை போடும் குப்பை தொட்டி ஆகி விட்டது .அதனால் தான் படித்த பள்ளியை எவனும் மதிப்பது இல்லை இன்று . அரசு பள்ளி ஆசிரியருக்கு கூட(எனது பள்ளி ஆசிரியர் கூட) தனது பள்ளி மீது நம்பிக்கை இல்லாமல் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர் ;வாங்கும் சம்பளம் அதிகம் அல்லவா ?
இன்று பலர் அரசு பள்ளி சரி இல்லை ஆசிரியர் சரி இல்லை .தமிழ் சரி இல்லை என்று வாதிடுகின்றனர் தனியார் பள்ளிக்கு ஆதரவாக. சமூக நீதி வேண்டுமென்று (உடை முதல் எல்லா சமூக மக்களும் ஒன்றிணைந்து படித்தோமே )நினைத்த என் எம் சமூக தந்தையர் கொண்டு வந்ததே அரசு பள்ளி .தரம் சரி இல்லை ஆசிரியர் சரி இல்லை என்பது இந்த அமைப்பின் பிரச்சனை அதை சரி செய்வதை விட்டு விட்டு தனியார் பள்ளிகளை தான் ஆதரிப்பேன் அவர்கள் தான் சரியா பாடம் நடத்துகிறார்கள் என்பது எல்லாம் சுத்த கம்பக் .நிலவு நாயகன் மயில் சாமி அண்ணாதுரை வரிகள் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .அரசு பள்ளியும் பாழ் அல்ல அன்னை தமிழும் பாழ்அல்ல அறியா மனமே பாழ் என்பேன்
இன்று அரசு பள்ளியில் படிப்பவர்கள் எல்லோரும் தாழ்த்த பட்ட மக்களும் மற்றும் முதல் தலைமுறை மாணவர்கள் தான் அதிகம் .நாம் தான் அரசு பள்ளியை காத்து ஆக வேண்டும் .ஏன் என்றால் அது மட்டுமே சமத்தவம் ஏற்படுத்த அமைக்க பட்ட புண்ணிய இடம் .எல்லோருக்கும் படிக்க ஏற்ற இடமாக அரசு பள்ளியை மாற்றுவது நம் ஓவ்வொருவர் கையிலும் தான் இருக்கிறது .முகப்பில் வெறும் வாய் வார்த்தையால் வடை மட்டுமே சுடாமல் செயலில் இறங்கி செய்து ஆக வேண்டும் இதுவே இன்றய நிலையில் மிக முக்கியமான விடயம் .அரசு தான் பணியை செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டே இருப்பது சரி தான் என்றாலும் அரசு செய்யும் முன் நம் அன்னை இறந்து விடுவாள் .தாயை காப்பது தனயன்களின் கடமை அல்லவா .இந்த பதிவு ஏற்கனவே எழுத நினைத்து இருந்தது தோழர்Sathish அவர்களின் ஒரு பதிவை படிக்கும் போது எழுத முடிவெடுத்து எழுதியும் விட்டேன் .
அரசுப்பள்ளிகள் நம் தாய் வீடு .நாம் எல்லோரும் சேர்ந்து அரசு பள்ளிகளை காப்போம் ..வெறும் பதிவு ஓன்று செய்ய முடியாது
செயல் தான் எழுத்தை பேச்சை விட முக்கியம் என்று நானும் உளமார எண்ணுபவன் என்பதால் அரசு பள்ளியை காக்க என்னால் முடிந்த எல்லாவற்றியும் செய்ய போகிறேன் .வாருங்கள் வந்து கை கோருங்கள் ..காப்போம் நமது தாய் வீட்டை ......

புதன், 18 ஜூன், 2014

வீடியோ கேம்சும் , நம் இன்றைய வாழ்க்கை முறையும் பின் நமது பெண்களும்

நான் சிறு வயதில் இருக்கும் போது எப்போது சமயம் கிடைக்கும், வீட்டில் இருந்து வெளியேறி தெருவில் விளையாடலாம் என்று எப்போதும்எண்ணி கொண்டு தான் இருப்பேன் .எல்லா குழந்தையும் என் வயதில் அப்படி தான் இருந்து இருப்பார்கள் .அப்படி விளையாடி விட்டு கை கால் முட்டில் ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு வந்த நாட்கள் உண்டு .அன்று அம்மா வேறு அடி பின்னி எடுத்த பின்பு தான் காயத்திற்கு மருந்து இடுவார்கள் .இன்றும் நெஞ்சில் பசுமையான நிகழ்வுகள் அவை .ஆனால் இன்றைய பெற்றோருக்கு அந்த கவலை கூட இல்லை ,குழந்தைகளை எங்கு வெளியில் விளையாட விடுகின்றனர் இப்போது .அதற்கு சொல்லும் காரணம் சுத்தம் இன்னும் இத்தியாதி இத்தியாதி  என்று .ஆனால் குழந்தை எப்படி விளையாடாமல் இருக்க முடியும் ,அதனால் கவலை பட்ட  பெற்றவர்களையும் பிள்ளைகளையும்  நிறைவு படுத்த வந்தது தான் வீடியோ கேம்ஸ் என்று டிவியில் விளையாடும் விளையாட்டு .என் சிறு பிராயத்திலேயே வீடியோ கேம்ஸ் வந்து விட்டாலும் இன்று வரை நான் விளையாடியது இல்லை .இப்படி குழந்தைகளை வீட்டில் அடைக்க அடுத்து வந்தது  கம்ப்யூட்டர் கேம்ஸ் எனப்படும் கணிணி விளையாட்டு.அதன் அடுத்த வடிவம் மொபைல் கேம்ஸ் எனப்படும் தொலைபேசியில் விளையாடும் விளையாட்டு .நான் பணி செய்யும் இடத்தில் உடன் வேலை செய்யும் அக்கா பையன் எப்போதும் எல்லாம் நேரம்  கிடைக்கிறதோ அப்போது எல்லாம் கணிணியில் விளையாடி கொண்டே இருப்பான் .யார் சொன்னாலும் கேட்க மாட்டான் . இப்போது வரும் கணினி விளையாட்டு பைக் ,கார் எப்படி திருடுவது ,திருடிய வாகனத்தில் கடைக்கு சென்று அங்கு இருக்கும் பொருளை திருடி விட்டு போலீசிடம் மாட்டி கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்ற சொல்லி கொடுத்து கொண்டே...... பட்டியல் நீள்கிறது .மேலும் கை துப்பாக்கி மூலம் எதிரில் வருபவரை எப்படி சுட்டு கொல்வது என்று குழந்தைகள் கற்று கணினியில் சுட்டு தள்ளுகிறார்கள் சக மனிதர்களை.இது மிக கோரமான விடயம் .ஒரு நல்ல வாசகம் உண்டு "குழந்தைகள் மனது மிக மென்மையது  அதை குப்பையால் நிரப்பி விடாதீர்கள் " என்று .இப்படி பட்ட விளையாட்டுக்கள் இணயத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி பயன் படுத்த முடியும்  

 அதோடு நின்றால் கூட பெரிய பிரச்சனை இல்லை இப்போது புதிதாக வந்து இருக்கும் விளையாட்டு தொலைபேசியில் .இந்த விளையாட்டு விளையாட நாம் ட்ச் தொலைபேசி வைத்து இருக்க வேண்டும் என்பது தான் முக்கிய விடயம் .இன்று பணம் இல்லாதவன் கூட ட்ச் தொலைபேசி வைக்கும் நேரம் அதானால் இந்த விளையாட்டு விளையாட மிக எளிது .பெண்ணின் போட்டோ திரையில் வரும் வரும் .அந்த பெண்ணின் போட்டோ மீது எந்த இடத்தில் அழுத்துகிறோமோ அந்த இடத்தில் அந்த பெண்ணின் உடை மறைக்க பட்டு nude திரையில் தோன்றும் .இப்படி ஓவ்வொரு பாகமாக செய்து மொத்த உடலும் இறுதியில் nude ஆக திரையில் தோன்ற செய்வது தான் அந்த விளையாட்டு .

நமது வாழ்க்கை முறை நமை எங்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறது என்று பார்த்தால் பெண்ணுடலை எப்படி கீழ் படுத்தவது என்ற கேவல சிந்தனையில் தான் .என் பையன் நல்லவன் அவன் இப்படி பட்ட தவறு எல்லாம் செய்யமாட்டான் என்று நீங்க சொன்னால் உங்களை விட முட்டாள் உலகத்தில் இல்லை .இன்று இப்படி  விளையாடும் சமூகத்தை உருவாக்கி விட்டு தான் பாலியல் வன்புணர்வை தடுப்பது எப்படி என்று பேசி கொண்டு இருக்கிறோம் இன்று .

முக்கிய குறிப்பு : 
இப்போது ரேபிங் கேம்ஸ் (rape games) வேறு கணினி சந்தையில் கிடைக்கிறது .பெண்ணை எப்படி பூங்கா ,சுரங்கபாதை  ,தனி பங்களா ,யாருமற்ற அலுவலகம் என்று வன்புணர்வு செய்யாலம் என்பதே அந்த கேம் கற்று கொடுப்பது 

ஆம் நாம் எதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம் ? 

சனி, 14 ஜூன், 2014

தோழன்


பயணங்கள் ஒரு மனித வாழ்கையை மாற்றி அமைக்குமா என்றால் ஆம் என்று சொல்லாம் அந்த ஆம் என்ற சொல்லுக்கு உதாரணம் தான் "சே " உலகில் தோழன் என்று சொல்ல பட தகுதி படைத்த ஒரு மனிதன் உண்டு என்றால் அந்த போட்டியில் பெரும்பாலும் முதல் இடமும் "சே " இக்குதான் .

சே குவேரா  அல்லது சே என்று அறிய பட்ட எர்னஸ்டோ குவேரா டி லா செர்னோ அர்ஜென்டினாவில் ரொசாரியோ என்ற இடத்தில் 1928 ஜூன் 14 இல் பிறந்தார் .அவருக்கு சிறு வயதிலே ஆஸ்மா இருந்ததால்  எப்போதும் இருமி கொண்டே இருப்பார் .அவர் தொடக்க கல்வி அவரது பெற்றவர்களளே கொடுக்க பட்டது .சிறுவயதிலே அவருக்கு ஆஸ்மா இருந்தாலும் எல்லா குழந்தைகளையும் போல பணிகளை செய்ய  சே தவறவே இல்லை .சேவின் பெற்றோர் அவரை ஒரு தைரியசாலி ஆகவே வளர்த்தனர் .சொந்தமாக தேயிலை தோட்டம் இருக்கும் அளவுக்கு வசிதியான குடும்பம் சே உடையது .

சிறுவயதில் ரக்பி விளையாட்டிலும் செஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய சே மிக சிறந்த வாசிப்பு பழக்கம் உள்ளவர் .அவர் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தது .மார்க்ஸ் ,போல்க்னர் ,கைடே,சல்காரி ,வேர்னே ,நேரு ,காப்கா ,காமுஸ் ,லெனின் ,பிரான்ஸ் ,ஏங்கல்ஸ்,வெல்ஸ் ,புரோஸ்ட் ஆகியவர்கள் எழுதிய நூல்களை விரும்பி வாசித்தார் சே . 

அவரது வயது அதிகரித்த போது அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா ,அலெக்ரியா ,இக்கசா,டாரியோ,ஆஸ்டுரியஸ்  ஆகியவர் எழுத்திகளின் மேல் ஈடுபாடு ஏற்பட்டது .புத்தர் அரிஸ்டாட்டில் ரச்ஸல் ,சிக்மெண்ட் பிராய்ட்,நீசே இவர்களின் புத்தகங்களில் தனது கருத்தையும் எழுதி வைத்தார் சே .  

மருத்துவம் படித்து ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சே மருத்தவம் படிக்க சேர்ந்தார் "புவனஸ் அயர்ஸ் " பல்கலைகழகத்தில் .ஒரு வருடம் படிப்பை நிறுத்தி விட்டு தனது நண்பன் அல்பர்டோ உடன் சேர்ந்து தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிள் சுற்றி வந்தது அவர் வாழ்வை மாற்றி அமைத்தது .அந்த நேரத்தில் தென் அமெரிக்கா முழுவதும் தொழுநோய் பரவி இருந்தது .அவர் தனது இந்த பயணத்தில் எழுதிய குறிப்புகள் "மோட்டார் சைக்கிள் டயரி " என்ற நூல் ஆக வெளி வந்தது அதே பெயரில் திரைப்படம் ஆகவும் வெளி வந்து விருதுகளும் பெற்றது .

இந்த பயணத்தின் மூலம் தென் அமெரிக்க கண்டம் முழுவதும் பரவி இருந்த ஏழ்மை ,பிணி ,அறியாமை ,அடக்குமுறை ,வாக்குரிமை இல்லாமை ,வர்க்க வேறுபாடு இவை  எல்லாவற்றிகும் காரணம் முதலாளித்துவமும் அமெரிக்காவும் தான் என்று சே எண்ணினார் அந்த பிரச்னைக்கு தீர்வாக அவர் தெரிவு செய்தது மார்க்சியம் ,அந்த மார்க்சிய அரசை அமைக்க ஆயுத போராட்ட வழிமுறை ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு வந்தார் சே .பயணம் முடித்து அர்ஜென்டினா திரும்பிய சே மருத்தவ டிப்ளோமா பட்டம் பெற்றார் .

மீண்டும் தனது பயணத்தை தொடங்கிய சே இம்முறை பொலிவியா ,இக்வடேர்,பனாமா ,கொச்தரிகா,கெண்டுராஸ் எல்சல்வடோர் ,கவுதமாலா ஆகிய இடங்களுக்கு சென்றார் ,கவுதமாலாவில் மக்கள் ஆட்சி தெரிவு செய்த குடியரசு தலைவர் குஸ்மான் என்பவர் நில சீர்திருத்த முறையில் தனி நபர்களின் பெரும் பண்ணை முறையை ஒழிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார் .அமெரிக்காவுக்கு அது பிடிக்க வில்லை உளவு அமைப்பான சி ஐ ஏ அந்த மக்கள் அரசை கவிழ்க்க தீவரமாக செயல் பட்டு கொண்டு இருந்தது .அப்போது சே அங்க தான் இருந்தார் . அங்கு தான் முதலில் சே ததனது மனைவி கில்டாவை சந்தித்தார் .இவர் இடது சாரி சிந்தனை கொண்ட அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பின் உறுப்பினர் .இவர் மூலம் ஆக சே பல தலைவர்கள் உடன் நட்பு ஏற்பட்டது .சே கம்யுனிஸ்டுகளுடன் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக செயல் பட தொடங்கினார் .ஆனால் கவுதமாலா அரசை அமெரிக்கா சதி செய்து கவிழ்த்தது .அப்போது சே இப்படி எழுதிகிறார் "விவசாயிகளிடம் ஆயுதம் கொடுத்து போரட்டத்தில் ஈடுபட செய்து இருந்தால் அரசு கவிழ்ந்து இருக்காது " என்று அன்றே  சி ஐ ஏ பார்வை சே மீது விழுகிறது ,அன்றில் இருந்து அவர் கொல்ல படும் வரை சி ஐ ஏ அவரை பின் தொடந்து  கொண்டே இருந்தது .

பாடிஸ்டா தலைமையில் இயங்கி கொண்டு இருந்த கியூபாவை விடுவிக்க பிடல் தலமையில் கொரில்லா போரட்டம்  நடந்து கொண்டு இருந்தது .ராணுவ தளம் மென்கடாவை தாக்கி ஆயுதம் கைப்பற்ற சூலை 26 புரட்சி நடந்தது அப்போது தான் .ஆனால்  இந்த போராட்டம் வெற்றி பெற வில்லை ,பிடல் மற்றும் அவர் தம்பி ரவுல் மற்றும் போராளிகள் கைது செய்ய பட்டனர் .15 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டது அப்போது வரலாற்று சிறப்பு மிக்க உரையான  "வரலாறு என்னை விடுதலை செய்யும் " என்ற உரை நிகழ்த்த பட்டது மருத்துவ மனையான நீதி மன்றத்தில் .அதன் பிறகு மக்கள் புரட்சியின் விளைவாக பிடல் மற்றும் தோழர்களுக்கு பொது மன்னிப்பு அழிக்க பட்டது . இந்த நேரத்தில் தான் பிடல் குழுவை சேர்ந்த லோபஸ் "சே" வை சந்திக்கிறார் கவுதமாலாவில் .இருவரின் கருத்தும் ஒத்து போகிறது சேவும் தங்கள் உடன் இணைய வேண்டி ரவுல் காஸ்ட்ரோ உடன் பேசுகிறார் லோபஸ் .கியூபா சுதந்திரம் ஜூலை மாதம் ஒரு நள் இரவில் சே -பிடல் சந்திப்பு மூலம் உறுதி செய்ய பட்டது .அப்போது சே இக்கு 27 இம் பிடலுக்கு 32 வயதும் தான் .

மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான போரட்டம் விளைவாக 1958 கியூபா  தலைநகர் கவானாவுக்குள் நுழைந்து கியூபாவை போரட்ட குழு தன் வசம் ஆக்கியது .அந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு கியூபாவின் மகன் என்று சே பிடலால் முன் மொழிய பட்டார் .தேசிய வங்கி அதிபர் மற்றும் விவசாய துறை தேசிய தலைவர் என்ற பதவியில் அமர்ந்தார் சே .ரூபாய் நோட்டில் சே என்று கை எழுத்து இடும் அளவுக்கு சே வளர்ந்து இருந்தார் கியூபாவில் .ஆனால் சே என்றுமே தன்னை பெரியவன் என்று எண்ணி கொண்டது இல்லை  விவசாயிகள் உடன் இணைந்து கரும்பு வெட்டியும்  தொழிலாளர் உடன் இணைந்து மூட்டை தூக்கியும் வாழ்ந்தார் சே .ஆனால் சக மனிதன் மீதான அன்பு அவரை நிலை கொள்ள செய்யவில்லை கியூபாவில் . அமெரிக்காவில் சி பி என் தொலைகாட்சி அளித்த நேர்காணலில் அமெரிக்கா ஒரு கழுதை புலி அதன் ஏகாதிபதியத்தை வேரருப்பேன் என்று அமெரிக்க மண்ணில் இருந்து கொண்டு சே பேசினார் .சே கியூபாவின் குடியுரிமை மற்றும் எல்லா பதவியையும் துறந்து காங்கோ பயணித்தார் .சே பிடலுக்கு எழுதிய கடித்தில் கியூபா உடன் ஆன புரட்சி தொட்பான கடமை முடிந்து விட்டதால் மற்ற நாடுகளில் புரட்சி ஏற்படுத்த தாம் கியூபா மண்ணை மக்களை விட்டு பிரிவதாக எழுதி இருந்தார் .ஆனால் அந்த நொடி ஒரு மிக பெரிய வீரனின் வாழ்கை முடிவுக்கு நாள் குறிக்க பட்டது 

கொரில்லா போரை வழி நடத்தும் நோக்குடன் பொலிவிய பயணம் ஆனார் போலி பாஸ்போட் உடன் .அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அத்துணை அழுத்தம் ஆக இல்லாததாலும் பொலிவியாவின்  ஏழ்மை புரட்சியை தோற்றுவிக்கும் என்று "சே" நம்பியதாலும் அங்கு கொரில்லா போராட்டம் வெற்றி பெற்றால் எல்லா நாடுகளுக்கும் பரவும் என்று "சே" எண்ணினார் .ஆனால் அவர் எதிர்பார்ப்பு வெற்றி பெற வில்லை ,அங்கு நடந்த போராட்டம் தோல்வியை தழுவியது."சே" வை தேடி  சி ஐ ஏ பொலுவிய காடுகளில் நுழைந்து தேடுதல் வேட்டை நிகழ்த்தியது .

தோழர்கள் உடன் யுரோ கணவாயை கடந்து செல்லும் போது வழியில் கண்ட ஆடு மேய்க்கும் ஏழை பெண்ணுக்கு 50 பேசொக்களை தருகிறார் ,அந்த பெண் தான் சே வை காட்டி கொடுக்கிறார் .சி ஐ ஏ அவரை சுற்றி வளைத்து கைது செய்து ஒரு பள்ளிகூடத்தில் வைக்கிறது ,அந்த பள்ளியின் நிலை கண்டு வருந்துகிறார் சே .வாழ்வின் இறுதி நேரத்திலும் சக மனிதன் மீதான அன்பு சே வுக்கு குறையவே இல்லை .இறுதியாக  கோழையே நீ சுடு , நீ சுடுவது சே வை அல்ல ஒரு சாதாரண மனிதனை தான் என்ற இறுதி வாசகம் ஒலிக்க  சே சுட்டு கொல்ல படுகிறார் ,தேசம் இனம் ,மொழி என்ற எந்த பாகுபாடும் பார்க்காது சக மனிதன் மீது கொண்ட பாசத்தால் போராடிய போராளி இந்த மண்ணை விட்டு சென்றான் .

தன் மகத்தான வாழ்க்கையால் சக மனிதன் மீதான அன்பால் தன் வாழ்கையை சக மனிதர்கள் வேண்டி அர்ப்பணம் செய்ததன் மூலம்  கோடிக்காணக்கான மக்களை தன் வச படுத்தியவன் ,வரலாற்றில் என்றும் சேவின் பெயர் நிலைத்து நிற்கும் .ஏன் என்றால் அவன் உயிர் இந்த மண்ணில் இருந்து பிரிந்தது சக மனிதன் மீது கொண்ட அன்பால் மட்டுமே ,இந்த பேருலகை நேசித்த வரலாற்றின் தலைமகன் தான் சே .இப்போது நடக்கும் கொடுமை என்னவென்றால் எந்த முதலாளித்துவத்தை சே எதிர்த்தாரோ அந்த முதலாளித்துவம் அவரை சந்தை படுத்தி கொண்டு இருக்கிறது  அமெரிக்காவில் அங்கு அதிகம் விற்பனை ஆவது சே உருவ படம் பொறித்த டி ஷர்ட் தான் ,ஆனால் வாழ்கையில் சே வின் கொள்கைகள் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது  என்பது மிக பெரும் கேள்வி தான் இன்று வரை .எது எப்படி இருந்தாலும் "சே "வரலாற்றின் தலைமகன் என்பதில் மாற்று கருத்து இல்லை  .......



ஞாயிறு, 1 ஜூன், 2014

நாம் மனிதர்களா ?

சக மனுஷி ஐரோம் சர்மிளா சானு 

ஆம் நாம் மனிதர்களா ? எனக்கு எப்போதும் தோன்றும் சிந்தனை இது தான் .இந்த இந்தியா என்ற தேசத்தின் ஆக பெரும்பான்மைவாத மக்களும் மதத்தை பின்பற்றுகின்றனர் .எல்லா மதமும் சக மனிதன் உயிர்கள் மீது அன்பு செலுத்தவே கூறுவதாக தொடர்ந்து சொல்ல பட்டு கொண்டே வருகிறது .உண்மையில் நாம் சக உயிர் மீது அன்பு செலுத்துகிறோமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல முடியும் ,ஆனாலும் இந்த பெரும் மக்கள் திரளில் வெகு சிலபேர்  தனை மறந்து இந்த சமூகத்தை நேசிப்வர்களாக  இருக்கிறார்கள் என்பதும் உண்மை தான் .

இந்த சமூகத்தின் பிரச்சனை தன்னை பாதிக்காவிட்டலும் தன்னையும்  தாண்டி இந்த சமூகத்தின் மீது உள்ள பேரன்பால் தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியை ஒதுக்கி விட்டு மனம் உவந்து போராடும் அற்புத மனிதர்கள் தாம் உண்மையில் மனிதர்கள் என்று சொல்ல பட தகுதி படைத்தவர்கள் .அப்படி ஒரு மனுஷி தான் மணிப்பூர் ஈன்று எடுத்து தந்த தங்க மங்கை இரோம் சர்மிளா சானு .

இன்றைய நமது தனிப்பட்ட வாழ்கையில் நல்லவனாக வாழதே, சுயநலவாதி இரு அப்படி இல்லாவிட்டால்  இந்த சமூகத்தில் நீ வாழும் வாழ்கையில் தோற்று போவாய் என்று மீண்டும் மீண்டும் வரும் கால சமூகம் ஆன குழந்தைகளுக்கு இக்கால சமூகம் ஆன நாம் நமது எடுத்துக்காட்ட வாழ்வின் மூலமும் கற்பித்து  கொண்டே வருகிறோம்  .ஆனால் அதே மக்கள் தான் இங்கு மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லை என்று குறை வேறு பட்டு கொள்கிறோம் .நமக்குள் இல்லதா ஓன்று எப்படி சமூகத்தில் இருக்கும், நாம் எல்லோரும் இணைந்தது தானே சமூகம் .

 இந்த தேசத்தின் அரசுகள் மணிபூர் மக்கள் மீது கொடுமையாக கொண்டு வந்த "ஆயுத படை சிறப்பு சட்டத்தை "எதிர்த்து  நீண்ட 14 வருடம் கடந்த பிறகும் இன்று வரை தொடர்ச்சியாக அகிம்சை வழியில் தனது உடலை வருத்தி இந்த தேசத்தின் கள்ள மவுனத்தை கலைக்க போராடி கொண்டு இருக்கிறாள் நம் சக மனுஷி .ஆனால் இந்த தேசத்தின் பெரும்பாண்மை கூட்டம் எந்த அடக்குமுறைக்கும் ஆளாகாமல் தன் குடும்பத்துடன் குதுகலமாக வாழ்வதால் தானோ என்னவோ ராணுவம் ,துணை நிலை சிப்பாய் கூட யாரையும் கொல்லவும் ,வன்புணரவும் அதிகாரம் கொடுத்து இருக்கும் சட்டத்தை நீக்க சக மனுசியுடன்  எழுந்து போராட தயார் இல்லை  இன்றுவரை .

தொடந்து 14 வருடம் ஆக தற்கொலை முயற்சி செய்தார் என்று வழக்கு பதிய பட்டு நீதி மன்றத்திற்கும் மருத்தவமனைக்கும் மாறி மாறி தன் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறாள் நம் சக மனுஷி ,ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் .

ஆமாம் உண்மையில் நாம் மனிதர்கள் தானா ? 





புதன், 7 மே, 2014

கல்வி என்ன விபச்சாரமா ?

ஒவ்வொரு கல்வி சாலை திறக்கப்படும் போதும்  சிறை கதவுகள் மூட படுகின்றன என்றான் ஒரு அறிஞன் . இது எவளவு உண்மையான தேவ வார்த்தை .கல்வி சாதி இழிவை போக்கி மனித வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வருகிறது என்பதும் நிதர்சனம் இங்கு  .நாம் கல்வி கற்கிறோம் என்பதன் பயனே மனித தன்மையுடன் வாழ செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் .ஒரு நாடு மதிக்கப் படுகின்றது என்றால் அதற்கு காரணம் அந்த நாட்டின் கற்றவர்களின் அளவை பொறுத்தது தான் .

நம் இன்றைய கல்வியின் நிலை என்ன ?மொத்த மக்களும் ஒரே சமமான கல்வியை தான் படிக்கிறோமா ? இங்கு தமிழ் வழி பள்ளிகளும் ,மெட்ரிக் பள்ளிகளும் ,சி பிஎஸ் ஈ பள்ளிகளும்  என்று  பல வழிகளில் கல்வி சொல்லி தர படுகிறது .முதலில் காமராஜர் காலத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கும் போது சமத்துவம் வேண்டும் என்பதற்காக உடை ,செருப்பு ,மதிய உணவு என எல்லோருக்கும் சமம் ஆக வழங்க பட்டது ,ஒரே முறை கல்வியும் வழங்க பட்டது அதனால் சமத்துவமும் இருந்தது ,


இப்படி நடைபெற்ற சுதந்திர தமிழகத்தின் தொடக்க கால கல்வி அந்த சமத்துவ பாதையில் இருந்து மெல்ல மெல்ல வெளியேற ஆரம்பித்தது இந்தியாவில் அமல் படுத்த பட்ட தாராளம் மயமாக்கல் கொள்கைக்கு பிறகு ,ஆங்கில வழி கல்வி ஒன்றே ஒரே வழி ,அந்த வழியில் கல்வி பெறாதவர்கள் எல்லாம் வேலை பந்தயத்தில் வீழ்ந்து போவர் என்ற பிரச்சாரம் மிக வேகமாக பரப்ப பட்டது ,மக்கள் மெல்ல மெல்ல காசு சம்பாதிக்க வக்கில்லாத தாய் மொழியை படித்து என்ன பிரயோஜானம் என்று என்ன தொடங்கினர் .


இந்த சூழ்நிலையில் அரசியல்வாதிகள் பணம் உண்டாக்க ஏற்கனவே சமூகத்தை கெடுத்த சாராயம்  காய்ச்சி விற்கும் தொழிலில் இருந்து வெளி வந்து கல்வி சாலை அமைக்கும் தொழிலில் தாங்கள் மது விற்று சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஆங்கில வழி கல்வியை உருவாக்கினர் ,தமிழ் நாட்டின் குக் கிராமத்திலும் கூட ஆங்கில வழி கல்வி சாலைகள் அமைந்தன.அதுவரை நடந்தோ அல்லது அரசு பேருந்தில் தான் கல்வி சாலை சென்று வந்தனர். ஆங்கில கல்வி சாலை ஆரம்பம் செய்த பிறகு எல்லா குக்கிராமத்திலும் பள்ளி பேருந்துகள் சென்று வர தொடங்கியது ,தினமும் சூ அணிதல் , டை கட்டுதல் ,என்று பல வெளி புற அடையாளம் மூலம் ஆங்கில கல்வி மோகம் மிக வேகமா பரவியது .

இந்த நிலையில் அரசு மெல்ல மெல்ல எல்லோருக்கும் கல்வி கொடுக்கும் தனது பொறுப்பில் இருந்து விலக தொடங்கியது .அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு செய்யாமல் இருப்பது  ,காலி பணியிடம் நிரப்பாமல் இருப்பது ,எல்லாவற்றிகும் மேல் பெண் குழந்தைகள் படிக்கும்  பள்ளிகளில் கூட கழிவறை கட்ட மறுப்பது மேலும் குடி தண்ணீர் அமைப்பு ஏற்படுத்ததா நிலை என்று அரசு  கல்வி சாலைநடத்தும் தனது பொறுப்பில்  இருந்து வெளியேறி கொண்டு இருந்தது .இதே நேரம் காசு இருக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்கில கல்விசாலை நோக்கி நடை போட தொடங்கினர் .

தமிழ் நாட்டில் எல்லோருக்கும் சம கல்வி கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் ஒரு பக்கம் ,எல்லோருக்கும் இலவச கல்வி என்று மறுபக்கம் போரட்டம் இப்படி பட்ட சூழ் நிலையில் தமிழ் நாட்டில் சமச்சீர் கல்வி அமல் படுத்த பட்டது ,இரு  அரசியல் கட்சிகளின் சொந்த சண்டையால் சமசீர் கல்வி அமல் படுத்தவே பல சிக்கல் இங்கு  ,இந்த நிலையில் மெட்ரிக் பள்ளிகள் எல்லாம் ரூம் போட்டு யோசித்து பயனாக எல்லோரும் சி பிஎஸ் ஈ முறைக்கு மாறினார் .அதனால் தாங்கள் கல்விச்சாலை தொழில் தடை இன்றி  செழித்து வளர்ந்தது .

இப்படி பட்ட நிலையில் தான் அரசின் மிக முக்கிய பிளான் கல்வியில் இருந்து வெளியேற வகுக்க பட்டது . அது அரசின் மிக சிறந்த திட்டம் என்று விபச்சார ஊடகங்களால் முன் மொழிய பட்டது ,அது எல்லா தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு செய்ய பட வேண்டும் என்ற அற்புத திட்டம் .பல்வேறு கட்ட தொடர் பேச்சுவார்த்தை பிறகு தனியார் பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒப்புகொண்டது .இதில் உச்ச காமெடி என்ன வென்றால் பல இடங்களில் 25 சதவீத பிள்ளைகள் கூட அரசு பள்ளியில் இப்போது கல்வி பெற வில்லை ,அப்படி என்றால் அரசு பள்ளிகளை பூட்ட வேண்டியது தானோ ?


இப்படி தமிழ் நாட்டில் கல்வி சென்று கொண்டு இருந்த நிலையில் இரண்டு தினம் முன்பு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்மைப்பு  சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் 25 கோடி அரசு கழிந்த வருடம் தர வேண்டும் அதை தரவில்லை அதனால் இந்த வருடம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாது என்று தெனாவெட்டாக கூறியது .மேலும் அரசுக்கும் தனியார் பள்ளி கூட்டமைப்புக்கு இடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தையில்  அரசு 25 கோடி தர ஒப்புகொண்டாதல் தனியார் பள்ளிகள் இந்த வருடமும் குழந்தைகளை சேர்க்கும் என்று நேற்று அறிவித்து உள்ளது அதை அரசின் வெற்றி என்று ஊடகம் நீட்டி முழக்கி வாசிக்கிறது .எவனுக்கும் வெட்கம் இல்லை இங்கு .

இந்த 25 கோடி இருந்தால் எத்தனை பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு ,ஆசிரியர் பணியிடம் நிரப்புதல் இப்படி எத்தனை நன்மைகளை செய்ய முடியும் .ஆனால் அரசுக்கும் அதை குறித்து சிறிது கூட கவலை இல்லை ,கல்விசாலை நடத்த சொன்னால் அது அரசு வேலை இல்லை எல்லா மக்களையும் மடையர்கள் ஆக்கும் குவாட்டர் கடை நடத்துவதே அரசின் வேலை என்று அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது கல்வி விடயத்தில்  . இங்கு இருக்கும் விபச்சார ஊடகம் காசு வாங்கி கொண்டு கூவுகிறது தனியாருக்கு ஆதரவாக .


உண்மையில் எவனுக்கும் குழந்தைகளில் கல்வி குறித்த அக்கறை இல்லை ,இவர்கள் நடத்துவது விபச்சார விடுதிகள் தானே .காசு கொண்டு வந்தால் புணர்ந்து விட்டு போ என்பது மாதிரி காசு கொண்டு வந்தால் மட்டுமே படித்து விட்டு போ என்கிறது இன்றைய பள்ளிகள் .நாமும் தனியார் பள்ளி ஆங்கில வழி கல்வி ஒன்றே முன்னேற ஒரே வழி என்று ஆழ் மனதில் பதிந்து வைத்து இருக்கிறோம் .நீங்கள் கேட்கலாம் என்னிடம் பணம் இருக்கிறது  எனக்கு பிடித்த பள்ளியில் என் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன் உனக்கு என்ன என்று .நீங்கள் கேட்பது உங்களை பொறுத்தவரை நியாயம் என்றாலும் ஏறி வரும் கல்வியின் விலையில் அரசு முழுவதும் வெளி வந்த பிறகு நம்மால் படிக்க வைக்க முடியா நிலையில் கல்வி கட்டண கொள்ளை வந்து நிற்கும் காசு கொடுக்க முடிய வில்லை என்றால் படிக்க வேண்டாம் என்பான் தனியார் பள்ளிகள் இன்றே பல இடங்களில் அது தான் நடந்து கொண்டு இருக்கிறது ,மேலும் மக்கள் திரள் மீது பல முறையில் இந்த சமத்துவம் இல்லா கல்வி மிக பெரிய பிளவை கொண்டு வரும் ,ஏற்கனவே சாதி மத பிளவில் சம படுத்த முடியா நிலையில் சென்று கொண்டு இருக்கிறோம் ,இன்னும் அதிக பிளவை தாங்கும் சக்தி இந்த மக்கள் திரளுக்கு இல்லை .இங்கு தேவை எல்லோருக்கும் ஒரே மாதரியான சமத்துவ கல்வி அதுவும் அரசே அதை இலவசமாக வழங்க வைக்க போராடுவது தான் ஒன்றே முடிவு  ,அப்படி நாம் இன்று போராட விட்டால் அடுத்த தலைமுறை கட்டண கொள்ளை தாங்க முடியாமல் ரோட்டில் இறங்கி போராடும் ,அப்போது அந்த  தலமுறை மாணவர்கள் சுட்டு வீழ்த்த படும் நடு ரோட்டில் ,உலகின் பல நாடுகளில் கட்டண கொள்ளை எதிரான மாணவர் போரட்டம் இதை தான் தெளிவு படுத்தி உள்ளது .கரம் கோர்ப்போம் ,இன்றே போரடுவோம்  நாளையை வரும் தலைமுறை கல்வி கனவு நலம் ஆகட்டும் .

திங்கள், 5 மே, 2014

சமத்துவத்தை நேசித்தவன் ................


"உலக தொழிலாளர்களே ஓன்று படுங்கள் 
நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை 
அடிமைதனத்தை தவிர 
ஆனால் வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது" 

என்று கூறிய மக்களின் மேதை மார்க்ஸ் பிறந்த தினம் இன்று .

பிறப்பும் வாழ்கையும் 

இன்றைய ஜெர்மனியில் ஒரு பகுதியான புருசியாவின் டிரையர் நகரில்  1818 ,மே மாதம் 5ம் தேதி யூத குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞர் தொழில் செய்த தந்தைக்கு   மூன்றாம் பிள்ளையாக பிறந்தார் மார்க்ஸ் .தன் 17 வயதில் பள்ளி படிப்பை முடித்த மாக்ர்ஸ் சட்டம் பயில பான் பல்கலைகழகம் சென்றார் .வரலாறு ,மெய்யியல் அகிய துறைகளை பெர்லின் பல்கலைகழகத்திலும் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தை யெனா பல்கலைகழகத்தில் பெற்றார் .
1841 பட்டம் பெற்ற மார்க்ஸ் தொடக்கத்தில் இதழியல் துறையில் பணி செய்தார் .ஆனால் அவரின் தீவிர அரசியல் கருத்துகளால் பணியில் தொந்தரவு ஏற்படவே மார்க்ஸ் பாரீஸ் சென்றார் .அங்கு தான் இந்த உலகத்தின்  வரலாற்றை மாற்றி அமைக்க போகும் சம்பவம் ஏற்பட்டது .1844 மார்க்ஸ் ஏங்கெல்சை சந்திக்கிறார் .ஒரு தூய நட்பு அப்போது தான் துளிர் விட்டது . இந்த இருவருக்கும் ஆன நட்பே மூலதனம் மற்றும் கம்னியுஸ்ட் அறிக்கை போன்ற வரலாற்றின் போக்கை மாற்றிய நூல்கள் ஏற்பட காரணம் காரணம் ,அந்த தூய நட்பு மார்க்சின் மரணம் வரை அவரை காப்பாற்றவும் செய்தது .

பெர்லின் பல்கலைகழகத்தில் ஆய்வு மாணவர்கள் என்ற சங்கம் நிறுவி வரலாறு மற்றும் பொருளாதர வாதம் பற்றி விவாதம் செய்து வந்தார் மார்க்ஸ் .முதல் நாள் கேட்கபடும் கேள்விக்கு அடுத்த நாள் பதில் தருவார் அவர் பதிலால் எதிர்த்தவர்கள் வாயடைத்து போவர் .படித்து களைத்து உறங்கா விழிகள் ,வாரப்படாத கேசம் ,தாடியை நீவி கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது ,பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது என்று அவரை பற்றி பல்கலைகழகமே பேச வைத்தது.


காதல் என்னும் அற்புத சக்தி 

லூத்விகான்  வெஸ்ட்பாலன் என்பவர் ஜெர்மானிய உயர்குடி பிரமுகர் ,அவர் குடும்பமும் மார்கஸ் குடும்பமும் நட்புடன் பழகி வந்தனர் .அந்த உயர் குடியில் தோன்றிய தங்க மங்கையே ஜென்னி .மார்கஸ் கண்கள் மட்டுமன்று  கேசம், தோல் எல்லாமே கருப்பு நிறம் ஜெர்மானியர் வெருப்புடன் நோக்கும் யூத இனம் வேறு ஆனால் ஜென்னி ரைன் லாந்தின் மிக சிறந்த அழகி பிரபுக்கள் வம்சம் . இவ்விருவரையும் வாழ்வில் இணைத்தது சேக்ஸ்பியர் கவிதைகளே .மார்க்ஸ் எல்லா சேக்ஸ்பியரின் கவிதைகளை மனனம் செய்தவர் . ஜென்னியின் தந்தையும் மார்க்சும் சேக்ஸ்பியரின் கவிதைகளை பற்றி எப்போதும் வியந்து பேசுவர் .இதனால் ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும் .அப்படி கவிதை மார்க்சிடம் இருந்து வீறு கொண்டு எழும் அந்த நிலையில் தான் ஜென்னிக்கு மார்க்ஸ் மீது காதல் அரும்பியது .ஜென்னி அகங்காரம் அற்ற அறிவும் தன்னலம் அற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவம் ஆணின் அழகு என்று எண்ணி இருந்தார் அந்த அழகு மார்க்சிடம் நிறைந்து இருந்தது .இவர்கள் காதல் திருமணத்தில் கை கூட எட்டு வருடம் காத்து இருக்க வேண்டி வந்தது .தன் காதல் தேவதை குறித்து மார்க்ஸ் உலகின் மிக சிறந்த பூ ஓன்று இருக்கும் ஆனால் அது கூட தோற்று போய் விடும் அவள் முன்னால் மேலும் ஒரு எரிமலையின் இதயத்தில் வடா மலர் போன்றவள் ஜென்னி என்றார் .,அப்படி பட்ட பெண் தன் வாழ்வில் வர வேண்டும் என்ற எண்ணம் தன அவர் டாக்டர் பட்டம் பெற மூல காரணம் .




என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல அவனை மறந்து விடு என்று மார்க்ஸ் பெற்றோர் கூறிய வார்த்தைகள் ஜென்னியை துன்பத்தில் ஆழ்த்தியது இந்த நிலையில் மார்க்ஸின் காதல் கடிதம் ஜென்னியை அடைந்தது அதை தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள் கண்ணில் நீர் ததும்பியதால் எழுத்துகள் மங்கலாக தெரிந்தது ,கண்களில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்தது அதற்கு காரணம் ஆன அற்புத வரிகள் "இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி ,ஜென்னி என்றால் காதல் "

தொழில் 

 பட்ட படிப்பை முடித்து ரைன் கெஜட் பத்திரிக்கை  வேலைக்கு சேர்ந்த பத்து மாதத்தில் அதன் ஆசிரியர் ஆக பொறுப்பு ஏற்றுகொண்டார் .மார்க்ஸ் எழுத்துகள் ஜெர்மானியர் மத்தியில் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சின,பத்திரிக்கை வியாபாரம் எகிற ஆரம்பித்தது .  மார்க்ஸ் இடதுசாரி சிந்தனை படைத்வர் ஆக மாறி கொண்டு இருந்தார் ,ஆனால் அவர் தந்தை அவரை குறித்து கவலை கொண்டு இருந்தார் . 1840ல் தத்துவ ஞனி கெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்து கொண்டார் .அவர்களில் மார்க்சின் கருத்துக்கு ஆதரவு கிட்டியது .கிறிஸ்தவ மதம் அறநெறி அற்றது .மனிதனுக்கு விரோதம் ஆன சக்திகள் மனிதனை ஆளுகின்ற மனித தன்மை அற்ற உலகத்தில் உண்டாக்க பட்டதே மதம் என்றார் மார்க்ஸ் .

மோசஸ் கோஸ் என்பவர் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் நான் போற்றுகின்ற மனிதர் டாக்டர் மார்க்ஸ் ,அவர் மிகவும் இளம் வயதுகாரர் .அவர் மத்திய கால தத்துவ ஞானத்திற்கு இறுதி அடி கொடுப்பார்.கூர்மையான நகைச்சுவை உணர்வை ஆழமான தத்துவசெறிவுடன் இணைக்கிறார் .ரூசோ ,வால்டேர் ,கோல்பார்க் ,லஸ்லிங்க் ,கெய்னே ,ஆகியோரின் இணைந்த வடிவமே மார்க்ஸ் .மோசஸ் ஏசு நாதர் வருவார் என்று முன் கூட்டி சொன்னது போல் கம்யூனிசப் புரட்சி வர போகிறது என்று முன் கூட்டி சொன்னவர் தான் மார்க்ஸ் என்று எழுதி உள்ளார் . 

புரட்சி 

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் ஒரே வர்க்கம் சேர்ந்தவனே ,அவர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்தால் அனைத்து தொழிலாளர் வாழ்வில் மகிழ்வு கிட்டும் என்று கூறியதோடு அல்லாமல் அவர்களை எல்லாம் ஓன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார் .அதை பற்றி எழுத அவர் தொடங்கிய பத்திரிக்கை பெயர் "முன்னேற்றம்" அதனால் அந்த பத்திரிக்கை தடையும் செய்ய பட்டது .இதனால் அவர் நாடு கடத்த பட்டார்,அவருக்கு ஒரே வாய்ப்பு அளிக்க பட்டது ,அது மன்னிப்பு கேட்பது ,ஆனால் மார்க்ஸ் அதை செய்ய வில்லை , 

சில நாட்களுக்கு பின் மார்க்ஸ் பெல்ஜியதில் குடியேறினர் அதனால் அந்த அரசு நடுங்க ஆரம்பித்தது  அப்போது மார்க்ஸ் வயது 27 தான் அந்த இளையவரை பார்த்து ஒரு நாடு நடுங்கியது என்றால்   அவரின் எழுத்து சிந்தனை எத்தனை வீரம் உடையது .நீங்கள் பேனாவை தொட்டால் சிறையில் தள்ள படுவீர் என்று எச்சரிக்கை செய்தது அரசு .அந்த நிலமையில் மார்க்சும் எங்கல்சும் இணைந்து பொதுவுடைமை சங்கத்தை உருவாக்கினர் ,இதில் இருந்த தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்து கொண்டனர் . 

லண்டன் மாநகரில் பிரமாண்டம் ஆன முதல் கம்யூனிஸ்டு சங்கம் உருவானது ,தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் உற்சாகம் அடைந்தது ,மார்க்ஸ் ஏங்கல்ஸ் இருவரும் மக்கள் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தனர் . 1848 பிப்ரவரி 24 பாரிஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது .மன்னன் லூயி பிலிப் தப்பி ஓடினார் .அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் 
நாட்டு மன்னன் தன் பாதுகாப்பை பல படுத்தி மார்க்சையும் ஜென்னியையும் சிறையில் அடைத்தான் .ஜென்னியை அந்த நாட்டின் தேக விற்பனை செய்யும் பெண் கைதிகளுடன் அடைத்தான் ,அந்த இரவு ஜென்னிக்கு நரகம் ஆக இருந்தது  ,பலமுறை பிரான்சு ,ஜெர்மனி ,இத்தாலி என்று நாடு கடத்த படும் பொது மார்க்ஸ் உதிர்த்த வார்த்தைகள் 

"எல்லா நாடும் என் நாடே 
எல்லா மக்களும் என் மக்கள் 
நானோர் உலக மகன் "

வாழ்வின் சோதனை காலம் 

உலகின் எல்லா மக்களையும் நேசித்ததால் தானே என்னவோ வாழ்கை முழுவதும் சோதனையில் உழன்றார் மார்க்ஸ். வரலாற்று பாதையில் ஜென்னி என்றாவது ஒரு நாள் ஒரு அடி மாறி இருந்தாலும் வரலாறு திசை மாறி இருக்கும்,ஆனால் ஜென்னி தான் நேசித்த பெருமகனின் எண்ணம் ஈடேற தன் வாழ்கையை தந்தார் .பசி அவர் வீட்டில் எல்லோரையும் பிடுங்கி தின்றது .ஜென்னியின் மார்பில் பால் சுரக்காமல் நிற்க தொடங்கியது ,தாய் உண்டால் தானே பிள்ளைகளுக்கு பால் கிடைக்கும் ,ஜென்னியின் மார்பகத்தில் ரத்தம் வழிய ஆரம்பித்தது,அப்போது ஓயதா அழுகை சத்தம் தான் மார்க்ஸ் ஜென்னியின் வீட்டில் எல்லாம் சக மனிதனை நேசிப்பதற்கு கிடைத்த பரிசு .   

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலமை கடன் கொடுத்தவர் ஜென்னியின் வீட்டில் இருந்து எல்லா பொருளையும் எடுத்து சென்றனர் அதோடு மூன்று பிள்ளைகளும்  மடிந்தனர் பசியால் .அப்போது ஜென்னி கூறிய வார்த்தை  என் குழந்தை பிறக்கும் போது தொட்டில் இல்லை இறக்கும் போது சவப்பெட்டி வாங்க காசு இல்லை

இப்படி பட்ட காலத்தில் தான் மார்க்ஸ் உலக பொருளாதரம் பற்றி பல தொடர் கட்டுரை எழுதி வந்தார் .1867 செப்டம்பர் 14 மார்க்ஸ் எண்ணும் மண்ணின் மைந்தனின் எழுத்தில் அவன் உழைப்பின்  தியாகத்தில் உருவான மூலதனம் என்ற நூல் புத்தகம் ஆக வெளி வந்தது .அதனை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகம் ஏங்கெல்சால் கொண்டு வர பட்டது.இன்றும் உலகத்தின் தலைசிறந்த புத்தகத்தில் ஒன்று மூலதனம் ஆகும் .

மூல தனம் நூலின் தேவை :

நமக்கு ஒரு பென்சில் தேவை அதை நாமே சுயமாக உற்பத்தி  செய்ய நீண்ட நேரம் கடின உழைப்பும் தேவை ஆனால் இந்த தொல்லை இல்லாமல் ஒரு விலை கொடுத்து அந்த பென்சிலை கடையில் இருந்து வாங்கி கொள்கிறோம் .நாம் அந்த பென்சிலை வாங்க வில்லை அந்த பென்சிலை தாயரிக்க பயன் படும் உழைப்பிற்க்கு  விலையை கொடுக்கிறோம் .அனால் அந்த பணம் உழைப்பை கொடுத்த தொழிலாளிக்கு கொடுக்க படவில்லை முதல் போட்டதால் முதலாளி மற்றும் வாங்கி விற்கும் வியாபரிக்கு அதன் பலன் கிடைக்கிறது .ஆனால் உழைப்பவன் தன்னை சுரண்டி கொழுக்கும் முதலாளியை கடவுள் என்று எண்ணுகிறான் .ஆனால் வியாபர போட்டியில் முதலாளி பென்சில் விலை குறைபதால் ஏற்படும் நஷ்டம் மீண்டும் தொழிலாளி மீது சுமத்தி மேலும் மேலும் அழுத்துகிறான் .இதை தான் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் உலக தொழிலாளர் அனைவரும் ஓன்று பட வேண்டியதன்  அவசியத்தை  தனது நூலின் மூலம்  உலகுக்கு எடுத்துஉரைத்தார் .

இறுதி காலம் 

புகை பிடிப்பதும் பால் கலக்காத காபி குடிப்பதும் மாலை நேர நடை பயிற்சி இவை தான் மார்க்சிற்க்கு  பிடித்த விடயம்.பிச்சை போடாமல் பசியோடு உள்ளவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும் என்று எண்ணிய மனிதர் அவர் .

1881 டிசம்பர் மாதம் ஜென்னி என்ற அற்புத மலர் காலம் எல்லாம் இந்த மண்ணின் மக்களுக்கு வேண்டி சிந்தித்த மார்க்சை தாங்கிய  அந்த பெரும் நெருப்பு அணைந்தது .1883 மார்ச் 14 ல் 
தன் 61 வயதில் மக்களுக்காக எந்நாளும் வாழ்ந்த சிந்தித்த மார்க்ஸ் என்னும் மனிதர்களின் இதயம் தனது மூச்சை தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்த படி தன் தந்தை ,மனைவி மற்றும் மகள்களின் புகை படத்தை கையில் வைத்து கொண்டு இந்த உலகத்தை விட்டு அகன்றது .

அவர் 

"யூதனாக பிறந்தார் 

கிறிஸ்தவன்  ஆக வாழ்த்தார் 

மனிதன் ஆக இறந்தார் 

காலங்கள் தோறும் அவர் பெயர் வரலாற்றில் நிலைத்து இருக்கும் "



புதன், 23 ஏப்ரல், 2014

மாற்றத்தின் திறவுகோல்


இன்று உலக புத்தக தினம். ஏழை விவசாய தொழிலாளி மகன் ஆக பிறந்த சேக்சுபியர் படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் வறுமை காரணம் ஆக  முறையான கல்வி கற்க முடியாமல் பள்ளியில் இருந்து நிறுத்த பட்டார் .ஆனால்  அவர் தாம் வாழ்ந்த 52 வருடத்தில் 38 நாடகங்களையும் 154 வசன கவிதைகளையும் உலக இலக்கியத்துக்கு கொடுத்துள்ளார் .இது மிக பெரும் சாதனை  அவரின் இயற்கை எய்த நாள் ஆனா 23 ஏப்ரல் உலக புத்தக தினம் ஆக கொண்டாடபடுகிறது 



மனிதனின் ஆக சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் தான் ,வரலாற்றை மாற்றியதில் புத்தகங்களுக்கு இருக்கும் பங்கை யாராலும் மறுக்க முடியா .ஒரு நல்ல புத்தகம் மிக சிறந்த நண்பன் .மிக கடினமான நேரங்களில் நமது மனதை சரி படுத்த புத்கம் வாசிப்பது மிக சிரப்பானது.நாம் வாழும் இந்த வாழ்கையில் சக மனிதர்கள் பற்றி அறிந்து கொள்ள ,சக மனிதனை நேசிக்க நமது வாழ்வை சரி படுத்த புத்தக வாசிப்பு மிக முக்கியம். 

ஒரு புத்தகத்தை நாம் வாசிக்கும் போது நமது கற்பனை வளம் கூடி நம் சிந்திக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது .நமக்கு புதிய அனுபவம் ஓவ்வொரு புத்தகம் படிக்கும் போதும் ஏற்படுகிறது .புத்தகம் இல்லாமல் என்னால் வாழவே முடியா .மிக சிக்கலான தருணங்களில் உற்ற தோழர் போல் உடன் வந்துள்ளது .கண் இருப்பதே புத்தகம் படிக்க தானே .


இதுவரை புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் இனியாவது தொடங்கலாம் தோழமைகளே .அருகில் இருக்கும் புத்தக கடைக்கு சென்று இன்றே புத்தகம் வாங்கி வாசிக்கும் பழக்கம் ஆரம்பியுங்கள் .புத்தகத்தையும் காற்றை போல் சுவாசிப்போம் .


உலகை மாற்றிய  அறிவாளிகளின்  புத்தகம் மீதான காதல் :

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்ட போது எந்த விடுதி நூலகம் அருகில் உள்ளதோ அங்கே என்றாறாம் 
                                                     .டாக்டர் அம்பேத்கர் 

நான் ஒரு போராளி உடன் பேசி கொண்டு இருக்கிறேன் முடித்து விட்டு வருகிறேன் அதன் பின் தூக்கில் இடுங்கள் என்றார் .
                                                         பகத்சிங்  

ஓவ்வொரு படம் நடிக்கும் முன் நூறு டாலருக்கு புத்தகம் வாங்கும் பழக்கம் உள்ளவர் 
                                                       சார்லி சாப்ளின் 

எங்கே நல்ல புத்தகம் எரிக்க படுகிறதோ அங்கே விரைவில் மனிதர்களும்  எரிக்க படுவர்  என்றார் 
                                                       சேகுவேரா 

ஒரு புத்தகம் திறக்க படும் போது உலகை நோக்கிய சன்லை திறக்கிறோம் என்றார் 

                                                   சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 

உலகின் தலைசிறந்த புத்தகத்தை உங்களிடம் இருந்து திருடி செல்பவர் உங்கள் நண்பர்கள் தான் என்றார் 
                                                 வால்டேர் 

ஒரு கோடி கிடைத்தால் நூலகம் அமைப்பேன் என்றார் 
                                                 காந்தி 

தனிமை தீவில் தள்ள பட்டால் புத்தகம் உடன் மகிழ்வாக காலம் கழிப்பேன் என்றார் 
                                                 நேரு 

இங்கு ஒரு புத்தக புழு உறங்குகிறது என்று தனது கல்லறையில் எழுத சொன்னவர் 
                                       பெட்ரண்ட்ரஸல்  

மனிதனின் ஆக சிறந்த கண்டு பிடிப்பு புத்கம்  என்றார் 
                                   ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்  

பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகம் கொடுங்கள் என்றார் 
                                  பெரியார் 

உண்ணாவிரதம் இருந்து சிறையில் புத்தகம் வாசிக்கும் அனுமதி பெற்றவர் 
                                  நெல்சன் மண்டேலா 

புத்தகமே பயங்கர போரட்ட ஆயுதம் என்றார் 
                               மார்டின் லூதர்கிங் 

புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளியில் தேடுங்கள் என்றார் 
                                     எங்கெல்ஸ் 

ஒரு நாட்டின் சந்ததியினர் தேடி அடைய வேண்டிய செல்வம் புத்தகம் 
                                 கென்றி தோரா 



வாழ்வோம் புத்தகங்கள் உடன் மகிழ்வாக 

வியாழன், 17 ஏப்ரல், 2014

மதமும் இந்த தேசத்தின் மக்களும்



இன்று தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பில் செயல் படும் டீஸ்டா  செடல்வாட் அவர்களின் நேர்காணல் படித்தேன் .இந்த தேசத்தில் மத கலவரம் நிகழ்த்தியவர்களுக்கு தண்டனை கிடைக்க வில்லை இதுவரை என்று வேதனை உடன் குறுப்பிட்டு இருந்தார் ,மனிதத்தின் ஆதரசுருதியான நீதியை காக்கும் முயற்சியில் தொடந்து பாடு பட்டு வருகிறார் .மத அடிப்படைவாதிகளிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது ,இருப்பினும் சமூக அமைதி மற்றும் நீதிகான போரட்டம் தொடர்ந்து  நடத்தி கொண்டு வருகிறார் .


இந்த தேசத்தின் முதல் மத கலவரத்தை ஆங்கிலேயர்கள் இந்தியா பாகிஸ்தான் என்று பிரித்து ஆரம்பித்து வைத்தனர் .அந்த கலவரத்தில் கொல்ல பட்ட மக்கள் எராளம் .வன்புணர பட்டு வீச பட்ட பெண்களும் ரயிலில் கொன்று அனுப்ப பட்ட மக்களும் ஏரளாம். வன் புணரபட்ட பெண்களை ஏற்று கொள்ள கூட இந்த சமூகம்  தயார் இல்லை.பெண்கள் கதரும் போதும் துடிக்க துடிக்க வெட்ட படும் போதும் கதறிய கதறல் மட்டும் இந்த உலகத்தை படைத்தான் என்று இந்த தேசத்தின் மிக பெரும்பான்மை மக்கள் நம்பும் செவிட்டு கடவுளுக்கு கேட்கவே இல்லை அது ஏன் என்று தெரியவுமில்லை கல்லுக்கும் இல்லாத ஒருவனுக்கும் எப்படி கேட்கும் ? இந்த தேசத்தின் தந்தை என்று போற்ற படும் காந்தி நான் ஒரு இந்து ,நான் ஒரு முஸ்லிம் ,நான் ஒரு கிறிஸ்தவன் ,நான் ஒரு சீக் நான் எல்லா மதமும் ஆனவன் என்று சொன்னார் ,ஏன் என்றால் அவர் எல்லா மத நூல்களையும் அறிவுபெருமக்கள் மதம் குறித்து எழுதிய பல்வேறு நூல்களை உள்வாங்கி படித்து இருந்தார் ,அவருக்கு முன்னும் பின்னும் இந்த தேசத்தில் எவருமே எல்லா மதமும் எனக்கு ஒன்றே என்று எண்ணியதில்லை ,செயல்பட்டதில்லை .காந்தி மதம் அரசியலில் ஒரு காலம் கலக்க கூடாது மதம் என்பது தனி மனித விடயம் ,நான் சர்வாதிகாரி ஆக இருந்தால் இரண்டுக்கும் இடையே கோடு கிழித்து பிரித்து வைப்பேன் என்றார் ,காந்திக்கு தெரியவில்லை இந்த தேசம் மதவெறியர்களின் தேசம் என்று .அந்த மத வெறிக்கே அவர் உயிரும் பறிக்க பட்டது என்பதே வரலாறு .

அதற்கு பின்னும் மத கலவரம் இன்று வரை நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது ,ஆனாலும் மக்களில்  மத அடிப்படை வாதிகள் அதிகம் ஆகி கொண்டே இருக்கிறார்கள் .சில கலவரம் பட்டியல் 
  • குஜராத் வன்முறை 2002
  • கோத்ரா தொடருந்து எரிப்பு 
  • பாபர் மசூதி இடிப்பு 
  • பாகல்பூர் கலவரம் 
  • முசாபர் நகர் கலவரம் 
  • மொராதபாத் கலவரம் 
  • மும்பாய் கலவரம் 
  • மண்டைகாடு கலவரம்  இன்னும் பல 

இன்று வரை நடந்த எந்த கலவரத்திலும் குற்ற செய்தவர்கள் தண்டிக்க பட வில்லை .சுதந்திரம் பெற்ற பிறகு கலவரம் மூலம்  அதிக உயிர்  இழப்பு ஏற்படுத்திய ஆண்டும் இடமும் ஆட்சி செய்தவர்களும்   


எண்வருடம்இடம்உயிரிழப்புஆண்ட கட்சிமுதலமைச்சர்
11967ஹாதியா ராஞ்சி183ஜன கிராந்தி தளம்எம்.பி.சின்ஹா
21969அகமதாபாத்512காங்கிரஸ்ஹிதேந்திரகே தேசாய்
31970ஜல் காவ்100காங்கிரஸ்வசந்தராவ் நாயக்
41979ஜம்ஷேட்பூர்120ஜனதா கட்சிகர்பூரி தாகூர்
51980மொராதாபாத்1500காங்கிரஸ்வி.பி.சிங்.
61983நெலே, அஸ்ஸாம்1819ஜனாதிபதி ஆட்சி
71984பிவந்தி146காங்கிரஸ்வசந்ததா பட்டில்
81984டில்லி2733காங்கிரஸ் (யூனியன் பிரதேசம்)-
91985அகமதாபாத்300காங்கிரஸ்எம்.எஸ்.சோலன்கி
101989பகல்பூர்1161காங்கிரஸ்எஸ்.என்.சிங்
111990டில்லி100யூனியன் பிரதேசம்
121990ஹைதராபாத்365காங்கிரஸ்சென்னா ரெட்டி
131990அலிகர்150ஜனதாதளம்முலாயம் சிங்
141992சூரத்152காங் + ஜனதா தளம்சிமன்பாய் படேல்
151992கான்பூர்254ஜனாதிபதி ஆட்சி
161992போபால்143ஜனாதிபதி ஆட்சி
171993மும்பை872காங்கிரஸ்சுதாகர் ராவ் நாயக்
182002குஜராத்1267பி.ஜே.பி.நரேந்திர மோடி



மன்னித்து கொள்ளுங்கள் ,நான் பேரரசன் ஆக விரும்பவில்லை அது என் வேலை அல்ல நான் யாரையும் ஆளவோ வெற்றி கொள்ளவே விரும்ப வில்லை முடிந்தால் அனைவருக்கும் உதவி செய்ய விரும்புகிறேன்,யூதர் கருப்பினத்தவர்,வெள்ளையினத்தவர் உதவவே விரும்புகிறேன் . நநாம் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் நாம் மனிதர்கள் ,இங்கு ஒருவர் அடுத்தவர் மகிழ்ச்சியை ஆதாரம் ஆக கொண்டு தான் வாழ வேண்டும் துன்பத்தை ஆதாரம் ஆக கொண்டு அல்ல .நாம் ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டியது இல்லை ,இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது என்றார் சக மனிதன் மனிதம் மீதான அன்பை காலம் எல்லாம் தன் படைப்பு வழி சொன்ன சார்லி சாப்ளின் .

ஆனால் நாம் எல்லோரும் நமது மதத்தை விட்டு கொடுக்க தயார் இல்லை ,எனது இறைவன் ஏக இறைவன் .எனது மார்க்கம் மட்டுமே உண்மையான மதம் /மார்கம் என்று எண்ணி கொண்டு தான் வாழ்கிறோம் ,என்ன ஓன்று அடிப்டை வாதிகள் தாங்கள் இறைவன் தான் உண்மையானவன் என்று மத கலவரம் மூலம் அடிக்கடி நிருபிக்கின்றனர்.அனால் சாதரண மனிதர்கள் என்று சொல்ல படுவோர் அதை நிருபிக்க வில்லை ,ஆனாலும் தங்கள் மதம் உண்மை இல்லை என்பதை எந்த மத மக்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள் . மனிதன் உண்டாக்கிய மதம் மனிதனை பிரித்து வைக்கவே பயன்படுகிறது ,உன்னையும் என்னையும்  இந்து ,கிறிஸ்தவன் ,முஸ்லீம் ,சீக் ,புத்தம் என்று பிரித்து வைத்தது இந்த மத அமைப்பு தானே ,இன்று வரை எனறாவது நாம் கேள்வி கேட்டு இருக்கிறோமா ? மனிதர்கள் ஆக அடையாள படுத்த பட வேண்டிய நாம்  நாம் ஏன்மதங்களால் பிரிந்து அடையாள படுத்த படுகிறோம் என்று .

இங்கு எல்லோருக்கும் இல்லாத ஒருவன் தேவை பட்டு கொண்டு இருக்கிறான் மனிதம் இருந்து விட்டால் இல்லாத ஒருவன் துணை நமக்கு தேவை இல்லை ,நமது எல்லா நேரத்திலும் உடன் வர சக மனிதம் உள்ள மனிதன் இருப்பான் ,ஆனால் இங்கு அப்படி இல்லையே ,யார் கடவுள் உண்மையானவன் என்ற போட்டி தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது ,மத அடிப்படை நாடுகள் அமைய வேண்டும் என்ற குரல் தான் ஓங்கி ஒலிக்கிறதே தவிர  மனிதம் அடிப்படையான நாடுகள் அமைப்போம் என்று குரல் ஒலிக்கவில்லை இங்கு .


இங்கு எல்லா மதமும் ஓன்று தான் என்று சொல்ல பட்டாலும் அது உண்மை இல்லை ,மிக சிறந்த உதாரணம் திருமணம் ,ஆணும் பெண்ணும் இயல்பாக இணையும் நிகழ்வு ,இந்த நிகழ்வில் வேறு வேறு மதம் சார்ந்த இருவர் திருமணம் செய்ய வேண்டும் என்றால் ஒருவர் ஆவது அடுத்தவர் மதத்திற்கு மதம் மாறி தான் திருமணம் செய்ய முடியும் .அது கூட சுலபம் இல்லை ,எப்படி சாதி தூய்மை எல்லா சாதி மக்கள் கலப்பு மூலம் கெட்டு விடும் என்று எண்ணும் சாதி வெறியர்கள் போல தான் மத வெறியர்களும் மத தூய்மை கெட்டு விட கூடாது என்பதில் உறுதியாக இருகின்றனர் .இதற்கு விதி விலக்காக சில குடும்பங்கள் மொத்த தேசத்திலும் இருக்கலாம் மீதி உள்ள அத்தனை மத நம்பிக்கை ஆளர்களும் மதம் இல்லாமல் போய் விட கூடாது என்றும் அதனால் மனங்கள் இணைய கூடாது  என்று அரிவாள் உடன் இடையே நிற்கின்றனர் ,எப்படி சாதி எதிர்த்து மணம் புரிவோர் சாதி வெறியர்களால் கொல்லபடுகிறார்களோ அது போல மதம் எதிர்த்து மணம் செய்வோரும் கொல்ல படுகின்றனர் .



எல்லா மத கலவரத்திலும் ஆண் என்பவன் தனது ஆண்மையை  பெண்களை வன்புணர்வு செய்வதன் மூலம் தொடந்து நிரூபிக்க பட்டு கொண்டே வருகிறான் ,பெண்களை வன்புணர்வு செய்வது ஆண்மையா ?மத கலவரம் மூலம் அதிகம் பாதிக்க படுவது சாதரண மக்களும் பெண்களும் தான் .ஆனால் மதம் உடன் அதிகம் பிணைக்க பட்டுள்ளதும் சாதரண மக்களும் பெண்களும் தான்.அவர்கள் முடிவு இல்லாமல் இருக்கிறான் என்று தொடந்து வழிபடும் சர்வ வல்லமை நிறைந்த இறைவன் அவர்கள் கதறும் போது எங்கு போய் இருப்பான் என்று தான் இன்றுவரை தெரியவில்லை .இறைவனை காண வில்லை என்று விளம்பரம் கொடுக்க வேண்டும் .ஆனாலும் மக்கள் இன்றுவரை ஓன்றும் செயல்படாமல் கல்லாய் உருவம் இல்லாதவனாய் இருப்பவனை  விட்டுவிட தயார் இல்லை ,மதம் இல்லாமல் ஆக்க யாரும் தயார் இல்லை ,மதம் இறைவன் இருப்பதால் தானே மத கலவரம் நடக்கிறது .மதம் இருக்கும் வரை மதத்தினால் கலவரம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் .பெண்களும் சாதரண மக்களும் கொடுமை படுத்த பட்டு கொண்டு தான் இருப்பார் .....மதத்திற்கு முடிவு இல்லை என்றல் மத கலவரத்திற்கும்  முடிவு இல்லை 

மதம் இல்லா உலகு மனிதம் சூழ் உலகு அழகானது ..........................


செவ்வாய், 15 ஏப்ரல், 2014

வானம் வசப்படட்டும்



இன்று வாழ்வின் சக தோழிகள் ஆன திருநங்கைகள் தினம் .

பெயர்காரணம்: 

திருநங்கை என்று அழைக்க படும் தோழிகள் பிறப்பால் ஆண் என்று அடையாள படுத்த பட்டு பின் தன்னை பெண்ணாக உணர்ந்து வாழ முற்படுவரை குறிக்கும் சொல்லாக இன்று பயன் படுகிறது .

திருநங்கைகள் தினம் தொடங்கிய விதம்: 

உலகம் முழுவதும் சமத்துவம் ,விடுதலை ,சகோதரத்துவம் வேண்டி பல்வேறு விழாக்கள் கொண்டாட படுகிறது ,அப்படி திருங்கைகளின் சமத்துவம் சம உரிமை ,சம வாய்ப்பு இவை போல  மற்றும் பல உரிமை வேண்டி 2008ஆண்டு அரவாணிகள் நலவாரியம் தோற்றுவிக்க பட்டது தமிழ்நாட்டில்.ஏப்ரல் 15ம் தேதி ,அதே  தினத்தை தமிழக அரசு அரசாணை மூலம் 2011ம் அண்டு முதல் திருநங்கை தினம் ஆக அறிவித்தது .அன்று முதல் தமிழ் நாட்டில் திருநங்கைகள் தினம் கடை பிடிக்க படுகிறது .



சமூக நோக்கில் திருநங்கைகள் : 

இன்றைய காலத்தில் திருநங்கைகள் பற்றி ஒரு அளவு புரிதல் ஏற்பட்டு இருப்பது ஆரோக்கியமான சூழ்நிலை என்றாலும் மிக அதிக இடங்களில் இன்னும் திருநங்கைகள் 
கேவல படுத்தபட்டு ஒடுக்க பட்டே வருகின்றனர் என்பது கண்கூடு.திருங்கைகள் குறித்த புரிதல் நமது வீடுகளில் இருந்து தொடங்கி ஆக வேண்டும் ,வீடுகள் முதலில் ஏற்றால் தான் சமூகம் ஏற்க்கும் .ஆனால் மிக பெரும்பான்மையாக குடும்பங்கள் நிராகரிக்கின்றன்ர்  .அதனால் பெற்றவர் உறவினர் பிரிந்து கண்ணீர் விடும் திருநங்கைகள் இன்று ஏராளம். குடும்ப அரவணைப்பு அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்யும், இதனால்  திருநங்கைகள் தங்கள் வாழ்வில் சிறந்த இடம் அடைய முயற்சித்து வெற்றி பெறுவர்.பெற்றவருக்கு எல்லோரும் பிள்ளைகள் தானே .அந்த எண்ணம் எல்லா பெற்றவர்களிடம் வந்தாக வேண்டும் .உறவுகளும் மதிக்க வேண்டும் .

முழு சமூக அங்கீகாரம் இன்னும் கிடைக்காத நிலையிலும் கலைத்துறை ,எழுத்து துறை ,ஊடகம் மற்றும் சமூக பணி ,சொந்த தொழில் செய்து வந்தாலும் பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழில் அல்லது கடை கேட்டல் என்னும் நிலைக்கு தள்ள பட்டுள்ளதே இன்று காண கிடைப்பது. பாலியல் அடையாள சிக்கல் காரணம் ஆக இவர்களுக்கு எந்த ஒரு சமூக நீதியும் இங்கு நடப்பாக்கவில்லை இந்த தேசம் .இப்படி செய்து விட்டு இந்த சமூகம் திருநங்கைகளை குறை வேறு சொல்கிறது ,தவறை தன் மேல் வைத்து கொண்டு தான் ஒடுக்கும் இனத்தின் மீது தவறை சமைக்கும் கேவல எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த பாலின ஒடுக்குமுறை .



இனி செய்ய வேண்டியவை:

 நெடும் காலமாக புறக்கணிக்க பட்டு வந்த சமூகம் ஆன திருங்கைகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து தார வேண்டும்,அது போல் தனியார் துறையிலும் திருநங்கைகள் பணிவாய்ப்பு அளிக்க பட வேண்டும் ,வேலை செய்யும் இடங்களில் பாலின வேற்றுமை களைய பட வேண்டும் இது தான் முக்கியம் திருநங்கைகள் வாழ்வை முன்னேற்றம் 
செய்ய வேண்டிய முக்கிய பணியாகும் .  பல்வேறு வெளிநாட்டு நிறுவனம் பல நாடுகளில் திருநங்கைகளை பணி வாய்ப்பு வழங்கி இருக்கிறது,இந்தியாவில் அந்த நிலைமை வர வேண்டும் .




ஊடகம் எப்போதும் திருநங்கைகளை மிக கேவலமாக சித்தரிப்பு செய்தே வருகிறது ,பெண்களை போக பொருள் போல் சித்தரிப்பு செய்யும் ஊடகம் திருங்கைகளை கேவலமாக சித்தரிப்பு செய்வதில் வியப்பு இல்லை என்றாலும் சமத்துவம் வேண்டி போராடும் எல்லோரும் இவ்விடயத்தில் ஒன்றாக வேண்டியதும்  எதிர்க்க வேண்டியதும் அவசியம் . 

இதுவரை கனடா நாட்டில் மட்டுமே திருநங்கைகள் எல்லா உரிமையும் பெற்று சமத்துவ வாழ்க்கை வாழுகின்றனர் ,அந்த நிலமை நமது தேசத்தில் வர உறுதி எடுக்க பட வேண்டும் .




என் தெரிந்த அளவில் சமூக போரட்டம் செய்யும் திருநங்கைகள் 

1.கல்கி சுபிரமணியன் 

சகோதரி அமைப்பின் நிறுவனர் .தன் வாழ்வை போராட்டத்தை லிவிங் ஸ்மைல் வித்யா என்ற நூல் மூலம் சமூகத்துக்கு சொன்ன எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்,நடிகை ,திருநங்கைகளுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி வழக்கு பதிவு செய்தவரில் ஒருவர்  .சமூக போராளி 

2.ரோஸ் வெங்கடேசன் 

விஜய் தொலைகாட்சி இப்படிக்கு ரோஸ் நிகழ்வை தொகுத்து வழங்கியவர் ,பாப் ஆல்பமும் வெளியிட்டு உள்ளார் .

3.ரேவதி 

மிக சிறந்த எழுத்தாளர் ,திருங்கைகளை பற்றி உணர்வும் உருவகமும் என்ற நூலை எழுதி உள்ளார் .சமூக போராளி 

4.பிரியா பாபு 

கண்ணாடி அமைப்பின் நிறுவனர் மற்றும் மிக சிறந்த சமூக போராளி 

5.நர்த்தகி நடராஜ் 

பிரபல பரத நாட்டிய கலைஞர்,முதல் பெண் என்று  இந்திய கடவு சீட்டு பெற்ற முதல் நபர் .பல்வேறு விருதுகளுக்கு சொந்தகாரர் .   

6.பாரதி கண்ணம்மா 

தனது பாரதி கண்ணம்மா அமைப்பு மூலம் திருநங்கைகள் பொருளாதரம் உயர வேண்டி போராடும் சமூக போராளி ,மதுரையின் சுயேட்சை வேட்பாளர் (எம் பி ஏலக்சன் )

7.சுவப்னா கார்த்திக் 

அருமை தங்கை மிக சிறந்த சமூக போராளி,மதுரையின் எல்லா மக்கள் நல போராட்டத்திலும் உடன் நிற்கும் சகோதரி .தேர்வு எழுதும் உரிமையை போராடி பெற்று முதல் வகுப்பில் தேர்வு செய்ய பட்ட அன்பு தங்கை ,மாவட்ட ஆட்சியர் ஆவர் என்று எதிர்பார்க்க படுகிறவள் .

சமத்துவம் வேண்டி நாம் திருநங்கைகள் உடன் நிற்போம் ,சமத்துவம் படைப்போம் ,இந்நாள் அதை நமக்கு சொல்லவே ஏற்படுத்த பட்ட பொன்நாள் .